தென்காசி, செப். 8-
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
           தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன்கீழ் தற்காலிகமாகப் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற 01.09.2021 முதல் 30.09.2021 வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
       விண்ணப்பதாரர்கள் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம், கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் (அ) வாடகைக் கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தினைக் காட்டும் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500/-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலான், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை / வாக்காளர் அடையாளஅட்டை/ குடும்ப அட்டை), வரி ரசீது,புகைப்படம் 2 (பாஸ்போர்ட் சைஸ்) ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

              இ-சேவை மையங்களில்; 30.09.2021-க்கு பின் பெறப்படும் இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.  மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் வேண்டுபவருக்கு இவ்வழிமுறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்;.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/