தென்காசி, சூலை 10-
தென்காசி மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்; தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். 18-40 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானசான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம்/ LLR (Learner License Registration), கல்விதகுதி சான்றிதழ், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பு வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தினை http://tenkasi.nic.in/forms என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி – 627811 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் ஆகஸ்ட்-8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நிருபர் நெல்லை டுடே