தென்காசி, சூலை 14:
மேலப்பாளையத்தில் ஆடு விற்பனை மும்முரமாக நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. ஆனால் ஆடு, கோழி, மாடு விற்பனை செய்யக்கூடிய சந்தைகள் திறப்பதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மேலப்பாளையம் மாநகராட்சி சந்தையும் மூடப்பட்டு உள்ளது.
மேலப்பாளையம் சந்தையையொட்டியுள்ள நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர், அன்னை காதீஜா நகர் பகுதிகளில் வியாபாரிகள் ஆடு, மாடுகளை லோடு ஆட்டோ, லோடு வேன்களில் கொண்டு வந்து இறக்கி வைத்து விற்பனை செய்தனர்.
நேற்று மேலப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. அந்த ஆடுகளை ஏராளமான பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்.
ஆடு, மாடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை விற்பனையானது.
சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக் கவசம் அணியாமல் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடியதால் நோய்தொற்று அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிருபர் நெல்லை டுடே