நெல்லை, செப்.10-
நெல்லை தச்சநல்லூரில் மத்திய அரசை சேர்ந்த ஒரு பெட்ரோலிய நிறுவன சேமிப்பு கிடங்கு உள்ளது.
இங்கிருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாள்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனிடையே நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், நெல்லை டவுன் ரத வீதிகள் மற்றும் மாநகரில் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் செல்ல தடை விதித்து போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தச்சநல்லூரில் உள்ள பெட்ரோலிய நிறுவன சேமிப்பு கிடங்கில் இருந்து செல்லும் 50-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் தச்சநல்லூர் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டன. பின்னர் லாரி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/