தென்காசி, சூன் 30 -தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ‘SMILE’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5.00 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4.00 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.00 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.
இந்ததிட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் தென்காசி மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை நேரடியாக அல்லது 9710264879 என்ற தொலைபேசியில் அலுவலக நேரத்தில், அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நிருபர் நெல்லை டுடே