விண்ணப்பிக்க சிறப்பு முகாம்!
தென்காசி, நவ. 16:
தென்காசி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு (நகர்புறம்) பயனாளிகள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நாளை (17ம் தேதி) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக பாரதப்பிரதமரின் “அனைவருக்கும் வீடு” திட்டம் (நகர்ப்புறம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயனாளிகள் தாங்களாகவே கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் (400 ச.அடி பரப்பளவில் கான்கிரீட் வீடு) குறைந்த வருவாயப்; பிரிவின் கீழ் வாழும் தகுதி வாய்ந்த குடும்பங்கள் பயன்பெறும் வகையில். பயனாளிகளுக்கு மானியமான ரூ.2.10 இலட்சம். நான்கு தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சொந்தக் குடியிருப்பு இருக்கக்கூடாது. பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் தாங்களாகவே சுயமாக கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய நகராட்சி பகுதிகளில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் பொருட்டு அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் 17.11.2021 அன்று சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே விடுபட்ட பயனாளிகள் ஆதார் நகல், உணவுப் பங்கீட்டு அட்டை (குடும்ப அட்டை) நகல், வங்கி கணக்கு புத்தக நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பட்டா அல்லது பத்திர நகல் ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today