நெல்லை, டிச.4:

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தடுப்பூசியும் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர்   விஷ்ணு   நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க நெல்லை மாவட்டத்தில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து நெல்லை வரும் நபர்களின் தகவல்கள் விமான நிலையங்களிலேயே திரட்டப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை ஒமைக்ரான் வைரஸ் யாருக்கும் நெல்லை மாவட்டதில் கண்டறியப்படவில்லை. நெல்லை ரயில் நிலையத்தில் கொரோனா (ஆர்.டி.பி.சி.ஆர்) பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியும் நடந்து வருகிறது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1500 படுக்கை வசதிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. ரெயில் நிலையங்களில் எடுக்கப்படும் பரிசோதனைக்கான முடிவு 24 மணி நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமும் நடத்தப்படும். மாவட்டத்தில் இதுவரை 72 சதவீதம் பேர் முதற்கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மெகா மற்றும் சிறப்பு முகாம்களுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருப்பதால் தொடர்ந்து அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில்   மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் பெருமாள், நெல்லை தாசில்தார் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tnhealth.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today