தென்காசி, சூலை 12-
பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில் பணகுடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வைரஸ் சிகிச்சை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவையான அளவுக்கு இல்லை என்பதை அறிந்து பவ்டா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பவ்டா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜெ.ஜாஸ்மின் தம்பி தலைமை தாங்கினார். நிதி நிறுவனத்தின் தெற்கு மண்டல முதுநிலை உதவி மேலாளர் ஆல்வின் சகரியா முன்னிலை வகித்தார். பணகுடி மண்டலத்தின் உதவி பொது மேலாளர் பி ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஞானதிரவியம் ஆகியோர் கலந்து கொண்டு பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை சுகாதாரத்துறை உதவி இயக்குனரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் வரதராஜன், வள்ளியூர் ஒன்றிய மருத்துவ அதிகாரி டாக்டர் கோலப்பன், பணகுடி மருத்துவ அதிகாரி (பொறுப்பு) டாக்டர் தேவ்மகிபன், மற்றும் டாக்டர் பிரீதா, மருந்தாளுநர் வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பவ்டா நிறுவனத்தின் பணகுடி கிளை மேலாளர் சுனில் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப் பாளர்கள் திசையன்விளை கிளை மேலாளர் எஸ்.வேல்சிங், களக்காடு கிளை மேலாளர் ஏ.ரெஜிலின், மூலக்கரைப்பட்டி கிளை மேலாளர் கே.ஹரிஹரசுப்பிரமணியன், ஆகியோர் செய்திருந்தனர்.
நிருபர் நெல்லை டுடே