தென்காசி, சூலை 23:
குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு நிலைமை ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் கடந்த மே மாதம் சீசன் தொடங்கியது. அன்று முதல் இருந்தே இங்குள்ள அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. இடையில் சில நாட்கள் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை இல்லாமல் குளிர்ந்த காற்று மட்டும் வீசி வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இரவு விடிய விடிய சாரல் மழை தொடர்ந்தது. இன்று காலையிலும் இதே நிலை நீடிக்கிறது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதமான தென்றல் காற்று வீசி குளுகுளு நிலைமை நீடித்து வருகிறது. இதனால் ஊட்டியில் இருப்பது போன்ற பருவ நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.ஆனாலும் தினமும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவியைப் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். பலர் செல்பி எடுத்துக் கொண்டு ஆறுதல் அடைந்து செல்வதை காணமுடிகிறது.
நிருபர் நெல்லை டுடே