நெல்லை,ஆக.16:

ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்படோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கல்வி உதவித்தொகையை நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர் அலுவலகம் அல்லது நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி விவரத்தை தெரிந்து கொள்ளலாம். 
மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப கேட்டு, விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் சென்னை அலுவலகத்தின் 044-28551462 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை -5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today