தென்காசி, டிச.22:
கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சுவாமி வகையறா கோவிலுக்கு சொந்தமான 9.73 ஏக்கர் நிலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ளது.
புஞ்சை நிலமான இந்த நிலம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்ததது. இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு நிலத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
சென்னை இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவின்பேரில் நேற்று தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன், கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன், தென்காசி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி ஆகியோர் முன்னிலையில் ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த இடத்தில் கோவில் நிர்வாகத்தின் மூலம், “இது கோவிலுக்கு சொந்தமான இடம்” என்று குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு அப்போது, சங்கரன்கோவில் துணை ஆணையர் கணேசன், பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோவில் உதவி ஆணையர் அருணாசலம், பரம்பரை அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் காசி லட்சுமி, கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி, மற்றும் கோபாலகிருஷ்ண சுவாமி கோவில் வகையறாக்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர். கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. https://www.hrce.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today