தென்காசி,  சூலை 22:

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நாளை (23ம் தேதி) முதல் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-


குழந்தைகளை அதிகம் பாதிப்படைய செய்யும் நியுமோகோக்கல் நோயிலிருந்து தடுக்கும் பொருட்டு தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தென்காசி மாவட்டத்தில்( 23.07.2021) அன்று துவங்கப்பட உள்ளது. இத்தடுப்பூசி 1 ½ மாதம், 3 ½ மாதம் மற்றும் ஊக்கத் தவணையாக 9 மாதங்களில் குழந்தைகளுக்கு அளிக்கப்பட உள்ளது. 3 தவணை நியுமோகோக்கல் கான்ஜுகேட்  தடுப்பூசியின் விலை தனியாரில் ரூ.12,000 ஆக இருக்கும் நிலையில், தமிழக அரசு இதனை இலவசமாக வழங்க உள்ளது.

 இத்தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், துணை சுகாதார நிலையங்களில் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரதி புதன்கிழமை வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசியை செலுத்தி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today