தென்காசி, செப்.9-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின், 2021-2022-ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தென்காசி மாவட்டத்தில் 22.10.2021 நாளன்று கூடுவதென முடிவு செய்துள்ளது.
இதனையொட்டி மேற்குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள் / குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்களில் தமிழில் மட்டும்) மனுதாரர் / மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை – 600009 என்ற முகவரிக்கு 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்தாக மனுக்கள் இருக்கலாம்.
மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்கண்டவைகளாக இருத்தல் கூடாது :-
1. தனிநபர் குறை.
2. நீதிமன்றத்தின்முன் வழக்கிலுள்ள பொருள்.
3. வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல்:
4. வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல்:
5. அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல்.
சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்.
ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பியிருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அவ்வமயம் மனுதாரர் முன்னிலையில் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.
இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 30.09.2021-க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது.
இத்தகவலை தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/