தென்காசி, நவ. 1:

தென்காசி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தோட்டக்கலை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தென்காசி தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மா,பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பல்லாண்டு பயிர்களில், காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி, நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்து, உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.

மழைக்காலத்தில் நோய்த்தடுப்பு மருந்துகள் தூர்களில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகளைகொண்டு நன்கு கட்ட வேண்டும்.
வாழை உள்ளிட்ட  வருடாந்திரப் பயிர்களுக்கு காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும்.

சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்தவேண்டும். உரிய வடிகால் வசதி செய்து, வாழைத்தார்களை முறையாக மூடி வைத்து 75 சதவிகிதம் முதிர்ந்த முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.
இதர  தோட்டக்கலைப் பயிர்களான மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி மற்றும் கேரட் போன்ற பயிர்களுக்கும் நீர் வடியும் பொருட்டு உரிய வடிகால் வசதி செய்து, நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்கவும்.

குறிப்பாக வயல்களில் பூஞ்சான் நோய்கள் தென்பட்டால் உரிய தாவர நோய் கட்டுபடுத்தும் மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள்அருகிலிருக்கும் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி  பயன்பெறலாம் தென்காசி தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.  https://www.tnagrisnet.tn.gov.in,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today