தென்காசி, மே 29 -தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களில் ரூ.2 கோடி மதிப்பிலான 968.37 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வீட்டில் இருந்தே வாங்கி பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் இல்லம் நாடி வரும் இனிய காய்கறிகள் திட்டம் கடந்த 24ந்தேதி மாவட்ட ஆட்சியரால் அறிமுகப்படுத்தப் பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் தோட்டக்கலை துறை சார்பில் 130 நான்கு சக்கர வாகனங்கள், வேளாண் துறை சார்பில் 56 நான்கு சக்கர வாகனங்கள் நகாராட்சிகள் சார்பில் 82 நான்கு சச்கர வாகனங்கள் 21 இருசக்கர வாகனங்களும் மகளிர் திட்டம் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 100 நான்கு சக்கர வாகனங்களும் 200 இரு சக்கர வானங்களும், பேரூராட்சிகள் சார்பில் 114 நான்கு சக்கர வாகனங்களும் 100 இரு சக்கர வாகனங்களும் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் தேவைக்கு ஏற்ப அதிக வாகனங்கள் அதிகரிக்கப்பட்டும் வருகிறது. இதில் அன்றாட தேவைக்கு பயன்படும் காய்கறிகளை தொகுத்து ரூ.30, ரூ.60 , ரூ.100 என தொகுப்பாகவும் தேவைக்கு ஏற்ப சில்லறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனைப்பணியில் ஈடுபட்டுள்ள 750 நபர்களுக்கும் கோவிட் தடுப்பு ஊசியும் மாவட்ட நிர்வாகத்தால் போடப்பட்டு வருகிறது. இந்த 6 நாட்களில் ரூ. 2 கோடி மதிப்பிலான 968.37 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் காய்கறிகள் விலை வெளிப்படைத்தன்மை உறுதி செய்யும் வகையில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள் சீராக கிடைப்பதை உறுதி செய்வும், விற்பனை விலை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அந்தந்த ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
நிருபர் நெல்லை டுடே