தென்காசி,  செப்.23-

தென்காசியில் அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆலோசனை நடத்தினார்.


தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் சங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர்  கோபால சுந்தரராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இது குறித்து
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக 2 கட்டங்களாக வருகிற 6, 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 438 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 85 ஆயிரத்து 940 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 402 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தல் பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளராக முனைவர் பொ.சங்கர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் பார்வையாளரை 7200587897 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/