தென்காசி, சூலை 9-
கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2-வது தவணை போட குறைந்தபட்சம் 84 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் 28 நாள் இடைவெளியில் 2-வது தவணை போடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, அனைத்து சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் என அனைத்து மையங்களிலும் கோவேக்சின் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது.
கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏற்கனவே இந்த தடுப்பூசி போட்டுவிட்டு இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் 8 நாட்களுக்கு பிறகு நெல்லை மாவட்டத்திற்கு நேற்று 1,500 கோவேக்சின் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டன. இதில் நெல்லை மருத்துவக்கல்லூரிக்கு 300 தடுப்பூசிகளும், மாநகரில் உள்ள மற்ற 9 மையங்களுக்கு தலா 100 தடுப்பூசிகளும், மீதி மற்ற மையங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த தடுப்பூசிகள் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இரண்டாவது தவணை தடுப்பூசி போட ஏற்கனவே காத்திருப்போர் பட்டியல் இருந்தவர்கள் தடுப்பூசி போட மையங்களில் குவிந்தனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மையத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு நேற்று காலை 7 மணி முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தடுப்பூசி போடப்பட்டது இதில் 300 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. மீதி இருந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நிருபர் நெல்லை டுடே