தென்காசி, சூலை 2 – ஆலங்குளம் அருகே ஊரணியில் மூழ்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். 


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தை அம்பலவாசகர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி. இவர்களுக்கு மதன் (வயது 7), ராகுல் (5) ஆகிய 2 மகன்கள் . அங்குள்ள பள்ளியில் மதன் 2-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடம் திறக்கப்படாததால், மதன் பள்ளிக்கு செல்லவில்லை. இவர்களுடன் சுரேஷின் பெற்றோர் ராமையா- கணபதி அம்மாள் வசித்து வருகின்றனர்.


நேற்று  கணபதி அம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப் போது பேரன்கள் மதன், ராகுல் ஆகியோரையும் அழைத்து சென்றார். ஊருக்கு வெளியே சிவன் கோவில் அருகில் உள்ள ஊருணியில் மாடுகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அவற்றை அழைத்து சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மதன் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினான். இதனைப் பார்த்த தம்பி ராகுல் பதறியவாறு பாட்டியிடம் கூறினார். உடனே கணபதியம்மாள் கூச்சலிட்டவாறு அலறி துடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது இறந்த மதனின் உடலை மீட்டனர். 


இது குறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, மதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்    அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நிருபர் நெல்லை டுடே