தென்காசி டிச. 28:
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வரும் 31.12.201 முதல் 02.01.2022 வரை 3 நாட்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து ஆனந்தமாக குறித்து மகிழும் சிறந்த சுற்றுலாத்தளமான குற்றாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள், குற்றாலம் வியாபாரிகள், விடுதிகளின் உரிமையாளர்கள், மற்றும் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் கடந்த 20ஆம் தேதி முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கொரோணா விதிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் 31.12.2021 முதல் 02.01.2022 ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதிக்கப்படுகிறது.
எனவே பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதை அறிந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today