நெல்லை,  சூலை 14:

கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில்  நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ஆட்சித் தலைவர்   அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :

பாளையங்கோட்டை அம்பேத்கர்நகரில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 366 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 

மேலும் அங்குள்ள வீடுகள் சிறிய அளவில் இருப்பதால் போதுமான இடவசதி இல்லை. மேலும் வீடுகள் சேதமடைந்து, மேற்கூரை இடிந்து காணப்படுகிறது. எனவே அந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். 

புதிய குடியிருப்புகளில் தனி சமையலறை, கழிப்பறை, குளியல் அறை, படுக்கை அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்ட வேண்டும். குழந்தைகளின் கல்வி நலன் கருதி சமாதானபுரம், மிலிட்டரி லைன், பெரியார் நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட இடங்களில் வாடகை வீட்டில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு இடம் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 அம்பேத்கர் நகரில் 800-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் அங்கு தனி ரேஷன் கடையும் கட்டித்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today