நெல்லை, செப்.13-

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில்  20 மையங்களில் நடந்த நீட் தேர்வினை 6,719 மாணவ, மாணவிகள் எழுதினர். 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6,997 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் 17 இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 3 இடங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்பதற்காக பெரும்பாலான மாணவ, மாணவிகள் காலை 9 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வந்தனர். காலை 10.40 மணியளவில் கடும் பரிசோதனைக்கு பின்னர் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மாணவ, மாணவிகள் உலோகத்தாலான எந்த பொருட்களையும் தேர்வறைக்கு கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அவர்கள் அணிந்திருந்த செயின், மோதிரம், தோடு உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி அரைஞாண்கயிறு போன்றவற்றை தங்களது பெற்றோர்களிடம் கழட்டி கொடுத்து விட்டு சென்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு உடல்வெப்பநிலையை பரிசோதித்து, கைகழுவும் திரவம் வழங்கினர். பின்னர் தேர்வறையில் மாணவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வு மையம் அருகில் மாணவ, மாணவிகளுக்கு முக கவசம், பேனா போன்றவை வழங்கப்பட்டது. 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மையங்களில் மொத்தம் 6,719 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 278 பேர் தேர்வு எழுத வரவில்லை. நீட் தேர்வையொட்டி பல்வேறு மையங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தடையற்ற மின்சாரமும் வினியோகம் செய்யப்பட்டது.

தேர்வு மையங்களில் மருத்துவ குழுவினரும் தயாராக இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/