நெல்லை,  செப்.22-

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 204 ஊராட்சி தலைவர்கள், 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 9 யூனியன்களில் 122 யூனியன் வார்டு உறுப்பினர்கள், 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15&ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதையொட்டி கடந்த 2 நாட்களாக வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ஊராட்சி தலைவர், யூனியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு அந்தந்த யூனியன் அலுவலகங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.

நேற்றும் ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் யூனியன் அலுவலக பகுதியில் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் 2 பேரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். 

நேற்று முன்தினம் வரை மொத்தம் 2,996 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,399 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்ட ஊராட்சி  வார்டுகளுக்கு நேற்று 15 பேர், ஒன்றிய வார்டுகளுக்கு 135 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 193 பேர், ஊராட்சி வார்டுகளுக்கு 1,056 பேர் என 1,399 பேர் மனு தாக்கல் செய்தனர். 
இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 4,395 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/