தென்காசி, செப். 30:

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றதை மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனைவர் பொ.சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 754 வாக்குச்சாவடி களிலும், இரண்டாம் கட்டமாக 574 வாக்குச்சாவடி என மொத்தம் 1328 வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 


இத்தேர்தலில் 10,678 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்றவுள்ளனர்.
06.10.2021 அன்று  முதல் கட்டமாக கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 09.10.2021 அன்று இரண்டாம் கட்டமாக தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர், குருவிகுளம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


தென்காசி மாவட்டத்தில்  277 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிற்கு போதுமான காவல்துறை பாதுகாப்பு, வீடியோ பதிவுகள் மற்றும் நுண் தேர்தல் மேற்பார்வையாளர்கள் இணையதள கண்காணிப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


 முதற்கட்ட பயிற்சி வகுப்பு 24.09.2021 அன்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று 29.09.2021 நடைபெற்றது. அதில் கடையம் வட்டாரத்திற்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பரமகல்யாணி மேல்நிலைபள்ளி ஆழ்வார்குறிச்சியில் வைத்தும், கீழப்பாவூர் வட்டாரத்திற்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் வைத்தும், ஆலங்குளம் வட்டாரத்திற்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் வைத்தும் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளை  தென்காசி  மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனைவர் பொ.சங்கர் பார்வையிட்டு  ஆய்வுமேற்கொண்டார்.
இப்பயிற்சியில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி களில்  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குபெட்டி களை பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு. மேற்படி, ஆய்வின் போது பயிற்சி பெற்று வந்த தேர்தல் அலுவலர்களிடம் தேர்தலின் போது ஆள்மாறாட்டம், ஒருவரின் அடையாளத்தை எதிர்த்தல், வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொண்டு வாக்களிக்க மறுத்தல் போன்ற நிகழ்வுகளை எவ்வாறு கையாள்வீர்கள் என மாவட்ட தேர்தல் பார்வையாளரால் வினவப்பட்டு, அதற்கான விளக்கத்தினையும் தெளிவுபடுத்தினார். 


அத்துடன் ஒவ்வொரு தேர்தல் படிவத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை தேர்தல் நாளன்று சரியாகப் பூர்த்தி செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென் அறிவுறுத்தினார்.


 மேலும், பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யும் பொருட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலரைக் கொண்டு வாக்குப்பெட்டிகளை திறக்கக்கோரியும் மற்றும் முடி முத்திரையிடச் செய்தும் பரிசோதனை செய்தார். 


அதே போல் தேர்தல் அலுவலர்கள் தேர்தலை நியாமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டுமென அறிவுறுத்தி, அனைத்து பணியாளர்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்  என தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் (தேர்தல்) சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கடையம்) திலகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/