தென்காசி, ஜூன் 1: தென்காசி மாவட்டத்தில் நடமாடும் காவல் தீர்வு மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங்  துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் புது முயற்சியாக தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி,ஆலங்குளம்,புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய நான்கு உட்கோட்டதிற்கும் தனி தனி  வாகனங்களில் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களை நியமித்து  நடமாடும் காவல் தீர்வு மையம் – மக்களை நோக்கி தென்காசி மாவட்ட காவல்துறை  என்ற ஒரு அமைப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  
 நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங்  பேசுகையில், நடமாடும் காவல் தீர்வு மையம் மூலமாக காவல்துறையினர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு  உள்ள குறைகளை கேட்டு அறிந்து அதனை உடனடியாக அந்த இடத்திலேயே வைத்து தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  
பொது முடக்க காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் அவர்கள் இடத்திலேயே கிடைக்க உரிய நடவடிக்கைகளை நடமாடும் காவல் தீர்வு மையம் மூலம் எடுக்கப்படும் எனவும்   பொதுமக்களுக்கும் குறிப்பாக முதியவர்களுக்கு காவல் துறையின் சார்பாக அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 மேலும் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் குடும்பத் தலைவர குடும்பத்தினருக்கு காவல்துறையினர் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அத்தியாவசிய தேவைகள் தேவைப்படும் பெண்களுக்கு  உதவி செய்வதற்காக நடமாடும் காவல் தீர்வு மையம் வாகனத்தில் பெண் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில்  ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் யாரும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் காவல்துறையினரால் இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது முடக்க காலத்தில் அரசின் உத்தரவிற்கு ஒத்துழைப்பு அளித்து வீட்டிலேயே இருந்து கொரோனா இல்லாத  மாவட்டமாக நமது தென்காசி மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

நிருபர் நெல்லை டுடே