தென்காசி, சூன் 15-
தென்காசி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தென்காசியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம்கூறினார்.
தென்காசி மாவட்டம், மத்தளம் பாறையில் ஷோகோ தொழில்நுட்ப மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலை வகித்தார். ஆய்வுக்கூட்டத்தில் ஷோகோ தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்பாடுகள் குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் த.மனோ தங்கராஜ் கேட்டறிந்தார்.
அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
ஷோகோ தொழில்நுட்ப நிறுவனமானது வளர்ந்து வரும் நிறுவனமாகும். இந்நிறுவனம் உலகளாவிய சிறந்த கெட்டியான அமைப்பை கொண்ட அமைப்பாகும். இந்நிறுவனம் ஊரக பகுதிகளில் இளைஞர்களுக்கு சிறந்த முறையில் வேலை வாய்ப்பு உருவாக்கி அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக உள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கிராமப்புற இளைஞர்களின் திறன்களை தெரிந்து கொண்டு அவர்களை தொழில்நுட்ப வளர்ச்சிப்பாதைகளில் கொண்டு செல்வதற்கு சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
தற்பொழுது கொரோனா போன்ற பெருந்தொற்றால் சவால்கள் இருந்து வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான முயற்சியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறை அமைச்சர்களும் அவர்கள் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு பெரிய அளவில் அவர்களது துறைகளை கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு முதல்வர் சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
தொழில்நுட்பத்தில் தேர்ச்சிபெற்ற இளைஞர்களின் திறன்களை பயன்படுத்தி தலைசிறந்த மாநிலமாக மாற்ற தொலைநோக்கு பார்வையுடன் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். தொழில்நுட்ப மாநிலமாக வளர்ச்சி பெறுவதற்கு அனுபவமிக்க இளைஞர்களின் அணுகுமுறையை மிகவும் அவசியமாகும்.
தென்காசி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக முறையாக கல்வி தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தப்படுத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி டேப்லட் மற்றும் கீபேடுகளுடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தி தரப்படும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, ஷோகோ தொழில்நுட்ப நிறுவனர் முனைவர் ஸ்ரீதர் வேம்பு, தென்காசி கோட்டாட்சியர் (பொ) முருகேசன், வட்டாட்சியர் சுப்பையா, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
நிருபர் நெல்லை டுடே