தென்காசி, ஜூன் 4- குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகம், கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில், குழந்தை திருமணங்கள் பரவலாக நடைபெறுவது தொடர்பாக நமது தமிழக முதல்வரின் அறிவுரைப்படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் 31.05.2021 அன்று மாநில அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் குழந்தை திருமணம் தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன்படி 18வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21வயது நிறைவடையாத ஆணுக்கும் குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், ஊக்குவிப்பவர்கள் மீதும், குழந்தை திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது 1லட்சம் அபராதமும் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்ந்து விதிக்கப்படும்.
மேலும் குழந்தை திருமணங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தகவல் தெரிவிக்க விரும்புவோர் சைல்டுலைன் 1098 என்ற எண்ணிலும், மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்புகொள்ளுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
.
நிருபர் நெல்லை டுடே