குற்றாலத்தில் சாரல் மழை துவக்கம் – அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கியது
தென்காசி, ஜுன் 6-
குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்தது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் துவங்கியுள்ளது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்தக் காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்து கொண்டு இருக்கும். இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.குற்றாலத்தில் இந்த குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கவும், அருவிகளில் ஆனந்தமாக குளிக்கவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து குவிந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையிலும் குற்றாலத்தில் இயற்கை ஊடரங்கிற்கு கட்டுப்படாமல் வழக்கம் போல் ஜுன் மாதம் துவங்கியதும் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது. இந்நிலையில் நேற்று குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்தது. இதனால் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளிலும் குளிர்ந்த காற்றுடன் சீசன் கால மெல்லிய சாரல் மழை பெய்தது.
இதனால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, கரடி அருவி, குண்டர் தோப்பு அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் துவங்கியது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுந்த நிலையிலும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் குற்றாலம் பகுதியில் சீசன்காலத்தை நம்பி வாழும் வியாபாரப் பெருமக்கள் குற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீரை ஏக்கத்துடன் பார்த்தனர். ஆனாலும் அவர்களால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை..ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஆண்டு முழுவதும் சீசன் காலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது .
ஆனால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வர அனுமதிக்கவில்லை.இதனால் குற்றாலம் சீசன் கால வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
எனவே தமிழக அரசு குற்றாலம் பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் சீசன் கால வியாபாரிகள் குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த ஆண்டு சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்லவும், அருவிகளில் குளிக்கவும் உரிய விதிமுறைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர் நெல்லை டுடே